
கோலாலம்பூர், ஜூன்-10 – மலாய் ஒற்றுமை என்பது இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும்.
அப்படியோர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கட்டியெழுப்பும் புதிய தேசிய ஒப்பந்தம் உருவாக வேண்டுமென, உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் முன்னெடுத்துள்ள மலாய் அரசியல் ஒற்றுமை முயற்சிகள் குறித்து ராமசாமி அவ்வாறு கருத்துரைத்தார்.
மகாதீர் உள்ளிட்ட தரப்புகளின் அம்முயற்சி வலதுசாரி அல்லது கடுமையான தேசியவாதக் கோணத்தில் பார்க்கப்படக் கூடாது; மாறாக, எல்லா மலேசியர்களையும் உள்ளடக்கிய விரிவான ஒரு தளத்தை உருவாக்கக் கூடிய வியூகத் திட்டமாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மலாய் மற்றும் மலாய்க்காரர் அல்லாதோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திச் செய்யத் தவறியுள்ளதாகக் கூறிக் கொண்ட ராமசாமி, ஆகவே மலாய் ஒற்றுமை என்பது சீன மற்றும் இந்தியச் சமூகங்களை புறக்கணிக்கும் வகையில் உருவாக்கப்படக் கூடாது என எச்சரித்தார்.
மலாய்க்காரர்களின் ஆதரவு மற்றும் பங்கேற்பின்றி எந்தவொரு தேசிய அதிகாரக் கோட்பாடும் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, இனவாத அரசியலை விட, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட, பன்முக இன விழிப்புணர்ச்சியை நோக்கி எதிர்க்கட்சிகள் பயணிக்க வேண்டும் என ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.