மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய வியூகத் திட்டங்கள்; மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

கோலாலம்பூர், மே-31,
மலேசிய இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக, மித்ராவின் கீழ் 65.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ள மடானி அரசாங்கத்திற்கு, மலேசிய இந்திய இளைஞர் மன்றம் தனது முழு ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இந்தியச் சமூகம் நாட்டின் பிரதான வளர்ச்சிப் பாதையிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை இந்த அறிவிப்பு காட்டுவதாக மன்றத்தின் தேசியத் தலைவர் தனேஷ் பசில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, B40 பிள்ளைகளுக்கான ‘செலிக் மடானி’ ஆரம்பக் கல்வி மானியம் மற்றும் ‘கல்வி மடானி’ இலவச டியூஷன் திட்டங்கள் வறுமைச் சங்கிலியை உடைக்க உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, B40 மற்றும் M40 பிரிவினருக்கான 50,000 ரிங்கிட் வரையிலான ‘உயர்வு மடானி’ தொழில்முனைவோர் திட்டத்தையும் மன்றம் வரவேற்றுள்ளது.
நாடு முழுவதும் 123 கிளைகளைக் கொண்டுள்ள தங்களது மன்றம், இத்திட்டங்களை அடிமட்ட அளவில் கொண்டு சேர்க்க மித்ராவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் தனேஷ் பசில் கூறினார்.
இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இப்புதியத் திட்டங்கள் பெரும் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



