
புத்ராஜெயா, மே-14- நாட்டில் பிறப்பு விகிதம் கடந்தாண்டை விட இவ்வாண்டின் முதல் காலாண்டில் 11.5 விழுக்காடு சரிவுகண்டுள்ளது.
105,613-ரிலிருந்து 93,500-ராக அது குறைந்திருப்பதானது, இதுவரை முதல் காலாண்டில் மலேசியா பதிவுச் செய்த ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
பிறப்பு விகிதம் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் 106 ஆண்டு குழந்தைகள் என பதிவாகியுள்ளதாக, தேசியப் புள்ளிவிவரத் துறை கூறியது.
பிறப்பு விகிதம் ஆக அதிகமாக 19.5 விழுக்காடாக சிலாங்கூரிலும், ஆகக் குறைவாக 0.3 விழுக்காடாக லாபுவான் கூட்டரசு பிரதேசத்திலும் பதிவாகியது.
இனவாரியாகப் பார்த்தால், 68.8 விழுக்காடு பிறப்பு விகிதம் மலாய்க்காரர்களை உட்படுத்தியதாகும்; மற்ற பூமிபுத்ராக்கள் 12.6 விழுக்காடாக உள்ள நிலையில், சீனர்கள் வெறும் 8.6 விழுக்காடாகவும் இந்தியர்கள் 3.8 விழுக்காடாவும் உள்ளனர்.
கடந்தாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சீனர்கள் மற்றும் இந்தியர்களின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
சீனர்கள் 1 விழுக்காடும் இந்தியர்கள் 0.4 விழுகாடும் சரிவைப் பதிவுச் செய்துள்ளனர்.
இதே காலக் கட்டத்தில் இறப்பு விகிதம் 2.0 விழுக்காடு குறைந்து 48,130-தாக பதிவாகியது.
71.6 விழுக்காட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறந்துள்ளனர்.
இனரீதியாகப் பார்த்தால் சீனர்களின் இறப்பு விகிதம் 26.8 விழுக்காடாகவும் இந்தியர்களின் இறப்பு விகிதம் 8.4 விழுக்காடாகவும் உள்ளது.
இவ்வேளையில், மலேசிய மொத்த மக்கள் தொகை 0.9 விழுக்காடு அதிகரித்து 34.2 மில்லியன் பேராக உள்ளது.
அவர்களில் 90.1 விழுக்காட்டினர் மலேசியக் குடியுரிமைப் பெற்றவர்கள்; 9.9 விழுக்காட்டினர் குடியுரிமை இல்லாதவர்கள் ஆவர்.