
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான PTPTN, தனது கல்விக் கடன் வசூலிப்பு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
2023 டிசம்பர் 31 வரையிலான நிலரவப்படி, அதன் சுழல் நிதியின் கடன் பாக்கி 10.85 பில்லியனாக உள்ள நிலையில், தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வான் சுராயா வான் ராட்சி (Wan Suraya Wan Radzi) அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தொகை 1.2 மில்லியன் கடனாளிகளை உட்படுத்தியிருப்பதால், கடன் நிர்வகிப்பு முறை மீதான கண்காணிப்பையும் PTPTN மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
கல்விக் கடன்கள் தாமதமாகத் திருப்பிச் செலுத்தப்படுவதும் 2019 முதல் 2023 வரைக்குமான காலக்கட்டத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
எனவே, மேலும் ஆக்கப்பூர்வமான கடன் வசூலிப்பு முறையை PTPTN அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாக வான் சுராயா சொன்னார்.
இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கான 2023 நிதி அறிக்கையில், தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அப்பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.