
கோலாலம்பூர், ஜூன்-11 – நாட்டின் மூத்த எழுத்தாளரும் தமிழ் இலக்கியவாதியும் கவிஞருமான பாவலர் ஐ.இளவழகு நேற்று காலமானார்; அவருக்கு வயது 84.
5 மாதங்களாகவே உடல்நலம் பாதிப்புற்றவர், சில தினங்களுக்கு முன்னர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சைப் பலனளிக்காது நேற்று பிற்பகலில் அவரின் உயிர் பிரிந்தது.
‘அகரம்’ மாத இதழை நடத்தி வந்தவருமான இளவழகு, மலேசிய எழுத்தாளர்களின் முதல் இலக்கிய சுற்றுலாவின் ஏற்பாட்டுக் குழு தலைவராவார்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைப் போட்டிகளிலும் ஏராளமான பரிசுகளை இவர் குவித்துள்ளார்.
அப்போதையப் பிரதமர் துன் ரசாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, ஆஸ்ட்ரோ வானவில் நடத்திய கண்ணதாசன் கவிதைப் போட்டியில் 25,000 ரிங்கிட் மதிப்பிலான வைர நெக்லஸ் பரிசு உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.
அதோடு இவரின் ‘இலட்சியப் பயணம்’ நாவல் SPM தேர்வின் பாட நூலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பாகும்.
கவிஞர் இளவழகுவின் இறுதிச் சடங்கு நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.14 மணி தொடங்கி சிரம்பான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.