
கோலாலாம்பூர் – ஜூன்-13 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, யூகங்களையோ அல்லது அவதூறான கருத்துகளை வெளியிடுவதையோ பொது மக்கள் தவிர்க்க வேண்டும். தேசிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அவ்வாறு நினைவுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாகவும், நீதிபதி அளித்த காரணங்களை ஒப்புக்கொள்வதாகவும் கூறிய சட்டத் துறைத் தலைவர், இவ்வழக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதையும் மறுக்க முடியாது என்றார்.
ஆனால், வழக்கின் முடிவு குறித்து, குறிப்பாக நீதிமன்றத்தில் கூறப்பட்ட காரணங்களின் எல்லைக்கு வெளியே செய்யப்படும் யூகங்கள் அல்லது அவதூறான கருத்துகள் தீர்ப்பில் சமரசம் ஏற்பட்டு விடக் காரணமாகி விடக்கூடாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
9 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த யூசோஃப், போதைப்பொருள் கடத்தல் மற்றும் 2 போலி துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கிகள் தன்னை சிக்க வைக்கவே தனது காரில் வைக்கப்பட்டன என்பது அவரது வாதமாக இருந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை ஆதாரங்களை முழுமையாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையிலும், சட்டக் கொள்கைகளின்படி, எந்தவொரு வெளிப்புற தாக்கமும் இல்லாமல் நடந்ததாக சட்டத் துறைத் தலைவர் கூறினார்.
தற்போது தீர்ப்பை விரிவாகப் படித்து வருவதாகவும், அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன் கிடைக்கக்கூடிய அனைத்து தேர்வுகளையும் பரிசீலிப்பதாகவும் அவர் சொன்னார்.