
ரவூப் – ஜூன்-15 – பஹாங், ரவூப், கம்போங் சுங்கை ருவானில் வயது முதிர்ந்த தம்பதி ஒருவர், தாங்கள் வசித்து வந்த வீட்டில் நேற்று இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.
சடலங்கள் அழுகிப் போய் புழுக்கள் மொய்த்ததை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இறந்து குறைந்தது 1 வாரத்திற்கும் மேலாகியிருக்கலாம்; எனினும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை அறியவில்லை என, ரவூப் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் மொஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் கூறினார்.
இந்நிலையில் மோசமான துர்நாற்றம் வீசவே, போலீஸுக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. சம்பவ இடம் விரைந்த போலீஸார், வீட்டுக் கதவு உள் தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் தீயணைப்பு – மீட்புத் துறையை உதவிக்கு அழைத்தனர்.
பிறகு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்ததில், சமையலறைத் தரையில் முதியவரும், அறையொன்றில் மூதாட்டியும் இறந்துகிடந்தனர்.
விசாரித்ததில், மரணமடைந்தது 75 வயது Woh Tong Seng, அவரின் 73 வயது மனைவி Loh Kam Ngo என அடையாளம் காணப்பட்டது. சடலங்கள் மீதும் சம்பவ இடத்திலும் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து அத்தம்பதியரின் பிள்ளைகளிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவுச் செய்தனர்.
அதில் தந்தைக்கு இருதய நோயாளி என்றும் தாய் parkinson எனப்படும் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் பிள்ளைகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டது.