
மஞ்சோங், ஏப்ரல்-18 – பேராக், மஞ்சோங்கில் சொந்த பெற்றோராலேயே கைவிடப்பட்டு அடையாள ஆவணம் எதுவுமின்றி அவதிப்பட்டு வந்த 13 வயது சிறுமி நிஷாலினிக்கு, ஒருவழியாக விடிவு காலம் பிறந்துள்ளது.
வணக்கம் மலேசியா வெளியிட்டிருந்த செய்தியின் எதிரொலியாக, அவருக்கு அடையாள அட்டை கிடைத்துள்ள நிலையில் உரியர்களின் கண்களில் படும்படி செய்தியை வெளியிட்ட வணக்கம் மலேசியாவுக்கும் தனக்கு அடையாள அட்டைக் கிடைக்க உதவிய அனைவருக்கும் நிஷாலினி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
குமார் – ரம்பாவதி தம்பதியரின் மகளான நிஷாலினி 4 வயதாக இருக்கும் போதே முன்பின் தெரியாத குடும்பத்தின் வீட்டு வாசலில் விட்டுச் செல்லப்பட்டார்.
அக்குடும்பத்தின் பாதுகாப்பில் சிறிது காலம் தங்கியிருந்த நிஷாலினி, பின்னர் மஞ்சோங் இந்து சபா, சனாதன ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு இதுநாள் வரை அங்கேயே வளர்ந்து வருகிறார்.
ஆனால், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அடையாட ஆவணம் எதனையும் பெற்றோர் நிஷாலினியுடன் விட்டுச் செல்லவில்லை.
இதனால் ஆரம்பப் பள்ளிக் கல்வியை எப்படியோ முடித்த நிஷாலினி, 13 வயதில் இடைநிலைக் கல்வியை மேற்கொள்வதில் பிரச்னையை எதிர்நோக்கினார்.
ஆசிரமத்தில் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டாலும், அடையாள ஆவணங்கள் இல்லாததால் தனது எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
படிப்பு தடைப்படுவது ஒரு புறமிருக்க, மருத்துவமனைச் சலுகைக் கூட தனக்குக் கிடைப்பதில்லை என, தான் எதிர்நோக்கும் சிரமங்களை அவர் ஏற்கனவே கூறியிருந்த செய்தி பலரின் கவனத்திற்குச் சென்று அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
சமூக ஊடகங்களை பிறரை அவதூறு பரப்பவும் வெட்டிக்கதை பேசவும் என சில ததப்பினரால் தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு குழந்தையின் வாழ்வில் விடியலை பிறக்கச்ச செய்துள்ள இது போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதைப் பார்ப்பதற்கு மனம் நெகிழ்ச்சி அடைகிறது