
செப்பாங், மே-20 – வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 112 பேர், செப்பாங் KLIA விமான நிலையம் வழியாக இந்நாட்டுக்குள் நுழைவதிலிருந்து நேற்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.
AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தாங்கள் மேற்கொண்டு வரும் தொடர் கண்காணிப்பின் பலனாக அம்முயற்சி முறியடிக்கப்பட்டதாக, AKPS இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேரை சோதனைக்கு உட்படுத்தியதில், வந்திறங்கி ஐந்தாறு மணி நேரங்களாகியும், குடிநுழைவு சோதனைச் சாவடிகளுக்கு செல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கூட்டம் அதிகாரிகளின் கண்களுக்கு தென்பட்டது.
கடைசியில் உரிய காரணங்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத இந்த 112 பேரும் கைதானதாக AKPS கூறியது.
அவர்கள் தத்தம் சொந்த நாடுகளுக்கே திருப்பியனுப்படுவர்.
நாட்டின் நுழைவாயில்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்யும் பொருட்டு, இது போன்ற அமுலாக்க மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடருமென்றும் அது உறுதியளித்தது.