Latestமலேசியா

விந்து தான மோசடியில் சிக்கி வாழ்நாள் சேமிப்பை இழந்த ஆடவர்

கோலாலம்பூர், ஜூன்-7 – பணி ஓய்வுப் பெற்ற 57 வயது ஆடவர் ஒருவர், இணைய மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 161,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.

ஹோங் கோங்கைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்ட பெண்ணுக்கு விந்து தானம் செய்யப் போய், Tan என மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் மோசடி வலையில் சிக்கினார்.

பிள்ளைப் பெற்றுக் கொள்வதற்காக ஏங்கும் இல்லத்தரசிக்கு விந்துவை தானம் செய்தால் 1.08 மில்லியன் ரிங்கிட் பணம் கிடைக்குமென்ற ஃபேஸ்புக் விளம்பரம் பிப்ரவரி வாக்கில் இவர் கண்ணில் பட்டுள்ளது.

பிறகு அப்பெண்ணின் வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்ட நபர், Tan-னை தொடர்புகொண்டு விந்து தானத்திற்கு அவரையே தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அதற்கு அவர் ‘அழகானவராக’ இருப்பதே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவுக் கட்டணம், பயணச் செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு 10,000 ரிங்கிட், 30,000 ரிங்கிட், 1,000 ரிங்கிட் என அவர் முதலில் கட்ட வேண்டும்.

ஆனால் அலுவல்கள் அனைத்தும் முடிந்தால் முதல்கட்டமாக 390,000 ரிங்கிட் பணம் கைக்கு வந்து விடும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அவரும் பணத்தை மாற்றினார்.

அப்போது அவரின் வங்கியே அழைத்து நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருக்கக் கூடுமன எச்சரித்துள்ளது;

இதனால் ‘வழக்கறிஞரிடம்’ இவர் சண்டைக்குப் போக, 1 மில்லியன் ரிங்கிட் பணம் உடனடியாக போடப்படும் என எதையோ சொல்லி ‘வழக்கறிஞரும்’ சமாளித்துள்ளார்.

அதன் பிறகே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவ்வாடவர் போலீஸில் புகார் செய்தார்.

தான் செய்த ‘முட்டாள்தனத்தை’ மற்றவர்களும் செய்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், MCA பொதுப் புகார் பிரிவு நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் அவ்விவரங்களை Tan பகிர்ந்து கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!