
கோலாலம்பூர், ஜனவரி 17 – கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் நேற்று காலையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, அவ்வழியை கடந்த போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உதவி நல்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டையும் குவித்துள்ளது.
மாதாந்திர பேரணியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புக்கிட் அமானை நோக்கி ஐஜிபி சென்று கொண்டிருந்த போது, நேற்று காலை 7.39 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தைக் கண்டதுமே, தனது வாகனத்தை நிறுத்தி, காயமுற்ற 50 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிளோட்டிக்கு சக போலீசாரின் துணையுடன் உடனடி உதவி வழங்கியதாகவும், அவசர தொலைபேசி எண்ணிற்கு அழைத்து ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து போலீசாரை அழைக்க உத்தரவிட்டதாகவும் ஐஜிபி தெரிவித்தார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், மக்கள் தன்னார்வக் குழுவின் (RELA) சீருடையில் இருந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மற்றொரு காரைத் தவிர்க்க முயற்சிக்கையில், கார் ஒன்றின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.