கோலாலம்பூர், மார்ச்-27, பொது மக்கள் தங்கள் வீடுகளில் Solar Panels எனப்படும் சூரிய சக்தி மின் தகடுகளைப் பொருத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியில், SolaRIS என்ற பெயரில் சூரிய சக்தி வெகுமதி திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்கிறது.
அத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, நான்காயிரம் ரிங்கிட் வரையில் விலைக் கழிவுச் சலுகை வழங்கப்படும்.
TNB கணக்கு வைத்திருக்கும் அனைத்து மலேசியர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம்; ஆனால் ஒருவர் ஒரு தடவை தான் அச்சலுகையைப் பெற முடியும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்த விலைக் கழிவுச் சலுகை வழங்கப்படும்.
ஆனால், வீட்டில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்ட பிறகே, TNB வாயிலாக அந்த விலைக் கழிவு வழங்கப்படும் என்றார் அவர்.
இது குறித்த மேல் விவரங்கள் TNB-யின் அகப்பக்கத்திலும், SEDA எனப்படும் எரிசக்தி ஆணையம் மற்றும் நீடித்த எரிசக்தி மேம்பாட்டு அதிகாரத் தரப்பின் அகப்பக்கத்திலும் கிடைக்கும்.
சூரியத் தகடுகளைப் பயன்படுத்திச் சூரிய ஆற்றலைப் பெறுவது பல நாடுகளில் வழக்கமாகி உள்ள நிலையில், மலேசியாவிலும் அதனைப் பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயலுகிறது.