
வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு JPJ கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-24,
வெளிநாட்டு ஓட்டுநர்களை கனரக வாகனங்களுக்கு வேலைக்கு எடுப்பது சட்டவிரோதம் எனவும், உரிய உரிமம் இல்லாமல் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சாலைப் போக்குவரத்து துறையான JPJ எச்சரித்துள்ளது.
அண்மையக் காலமாக இந்த போக்கு அதிகரித்து வருவதை அடுத்து இந்த கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்றைய Op Pemandu Warga Asing சிறப்பு சோதனையில், 11 லாரிகள் வெளிநாட்டு ஓட்டுநர்களால் இயக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களுக்கு தொழில்முறை ஓட்டுநர் உரிமமோ, பொதுச் சேவை வாகன அனுமதியோ எதுவும் இல்லை.
தவிர, கனரக வாகனமோட்ட முறைப்படி பயிற்சி பெற்றதோ அல்லது சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோ கிடையாது.
இந்நிலையில், இனி ஓட்டுநர்கள் மட்டுமல்ல, நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என JPJ கூறிற்று.
தவிர, தேசிய நிதி குற்ற தடுப்பு மையமான NFCC மற்றும் குடிநுழைவுத் துறையுடன் இணைந்து, சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் நிதி குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.



