
ஷா ஆலாம், மே-26 – சிலாங்கூர், ஷா ஆலாம் மாநகர மன்றத்தின் வெள்ளி விழாவை ஒட்டி, ‘Golden Parking’ இலவச வாகன நிறுத்துமிட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20,000 க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என, மேயர் டத்தோ மொஹமட் ஃபாவ்சி மொஹமட் யாத்திம் தெரிவித்தார்.
இந்த ‘Golden Parking’ திட்டமானது, ஷா ஆலாம் மாநகர் முதியோர்களுக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிச் செய்வதோடு, சமூகத்திற்கு அவர்கள் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் ஓர் அடையாளமாகவும் இருக்குமென அவர் சொன்னார்.
இலவச வாகன நிறுத்துமிடத்திற்கான 5 அளவுகோல்களை விண்ணப்பத்தாரர்கள் பூர்த்திச் செய்ய வேண்டும்.
குறைந்தது 60 வயதுடையவராகவும், மாநகரின் அதிகார வரம்பிற்குள் மதிப்பீட்டு வரி செலுத்துபவராக இருப்பதும் அவற்றிலடங்கும்.
அதோடு, காரின் உரிமை பத்திரம் அந்த மூத்த குடிமக்களின் பெயரில் இருக்க வேண்டும்; ஒவ்வொரு முதியவரும் Smart Selangor Parking முறை அல்லது Flexi Parking வழியாக ஒரு காருக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
அதன் செல்லுபடியாகும் காலம் இரண்டாண்டுகளாகும்; அதன் பிறகு புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்த வசதி ஷா ஆலாம் மாநகரின் அதிகார வரம்பிற்குட்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
எனினும், தனியார் வாகன நிறுத்துமிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடங்கள், பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள், 2 மணி நேரங்களுக்கான வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சாலையோரம் அனுமதிக்கப்பட்ட கட்டங்களில் அல்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த வசதி வழங்கப்படாது.