
புக்கிட் மெர்தாஜம், மார்ச் 27 – போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் ஓட்டுநர் ஒருவர் கொள்கலன் லோரியை ஓட்டிச் சென்றதோடு வாகனத்தின் டயர்களில் ஒன்று வெடித்திருந்த நிலையில் சாலையை பயன்படுத்தும் மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதனை ஓட்டிவந்தது தெரியவந்தது. நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு Juru Toll சாவடியில் பினாங்கு சாலை போக்குவரத்துத்துறையின் அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் அந்த லோரி ஓட்டுர் கைது செய்யப்பட்டார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையின்போது சம்பந்தப்பட்ட 45 வயது லோரி ஓட்டுனர் பேராவின் , தைப்பிங்கிலிருந்து பிறையை நோக்கி அவர் ஓட்டிவந்த கொள்கலன் லோரியின் டயர் வெடித்திருந்தது கண்டுப்பிடிக்கப்படுவதற்கு முன்பாக சோதனைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையின்போது அந்த லோரி ஓட்டுநர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது அவரது சிறுநீர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக பினாங்கு சாலை போக்குவரத்துத்துறை இயக்குநர் சுல்கிப்ளி இஸ்மாயில் தெரிவித்தார். அந்த லோரியின் டயர்களில் ஒன்று வெடித்தருந்த நிலையில் அவர் தொடர்ந்து அந்த கொள்கலனை ஓட்டிவந்தது மிகவும் ஆபத்தானது என்பதோடு இது அந்த வாகனத்தின் பிரேக் செயல் இழப்பை ஏற்படுத்தும் என்பதோடு மோசமான விபத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருந்ததாக சுல்கிப்ளி கூறினார்.
அதோடு அந்த லோரியின் டயர்கள் தரமானதாக இல்லையென்பதோடு மிகவும் குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 18 ஆம் தேதிவரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நான்கு பகுதிகளில் தமது தரப்பினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் சுல்கிப்லி கூறினார்.