
கோத்தா கெமுனிங், மே-29 – SPM தேர்வில் 11A-க்கள் பெற்ற இந்திய மாணவி ஒருவருக்கு ஏற்கனவே மெட்ரிகுலேஷனில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக, உயர் கல்வி அமைச்சு அளித்திருக்கும் விளக்கத்தை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் வரவேற்றுள்ளார்.
விரைந்து உரிய விளக்கத்தை அளித்த அமைச்சின் செயல் பாராட்டத்தக்கது என்றார் அவர்.
அதே சமயம், இவ்விவகாரம் தொடர்பில் முன்னதாக எழுப்பப்பட்ட கேள்வியானது, பொதுப் பல்கலைக்கழகத்தில் இல்லாமல் பாலிடெக்னிக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டது ஏன் என்பதைப் பற்றித் தான் என பிரகாஸ் தெளிவுப்படுத்தினார்.
11A என்ற மிகச் சிறந்தத் தேர்ச்சியைப் பெற்ற மாணவி, நேரடியாக பட்டப்படிப்பை மேற்கொள்ளும் எல்லா தகுதியையும் கொண்டுள்ளார்.
ஆக, முதல் வாய்ப்பே அவருக்கு பொதுப் பல்கலைக்கழகத்தில் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதனை மறுப்பது, அம்மாணவியின் கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.
அதோடு, நாட்டின் எதிர்கால தூண்களில் ஒன்றை வளர்த்து விடும் வாய்ப்பை நாமே தவற விடுகிறோம் அல்லது தள்ளிப் போடுகிறோம் என்பதாகி விடும்.
எனவே, இந்த மாணவி விவகாரத்தில் உயர் கல்வி அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தி, அவருக்கு நேரடி பல்கலைக்கழக வாய்ப்பை வழங்க வேண்டும் பிரகாஸ் கேட்டுக் கொண்டார்.
மாணவர்கள் கடின உழைப்பைப் போட்டு, கட்டொழுங்கையும் கடைப்பிடித்து மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெறும் போது, அதற்கு உரிய அங்கீகாரம் வழங்கி ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் கடமையாகும்.
எனவே, உயர் கல்வி அமைச்சு நல்ல முடிவை எடுக்கும் என நம்புவதாக பிரகாஸ் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அம்மாணவிக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வைரலான நிலையில், அவருக்கு சிலாங்கூரில் மெட்ரிகுலேஷன் கல்வியை மேற்கொள்ள இடம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரத் தரப்பு விளக்கியுள்ளது.



