
கோலாலம்பூர், மே-14 – யாயாசான் இல்திசாம் மலேசியா, 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான இந்தியச் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் என்ற பெயரில் அண்மையில் ஒரு கலந்துரையாடலை நடத்தியது.
ஏற்கனவே இரு முறை நடைபெற்ற நிலையில், மூன்றாவது சுற்றாக மே 11-ஆம் தேதி சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் இந்நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சன்வே பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் மகேந்திரன், MIET எனும் மலேசிய பொருளாதார உருமாற்ற சங்கத்தின் தலைவர் மனோகரன் மொட்டையன் உள்ளிட்ட சமூகப் பொருளாதார வல்லுநர்கள், கல்விமான்கள், அரசு சாரா அமைப்பினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நூருல் இசா அன்வார் சிறப்பு பிரமுகராக வருகை தந்து கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இந்தியச் சமூகத்தின் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புகளும் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இடம் பெறுவதை உறுதிச் செய்வதெப்படி என்பதை கலந்துரையாடல் விவாதித்தது.
கல்வி, SMI எனப்படும் சிறு நடுத்தர வியாபாரம், மகளிர் மற்றும் இளையோர் ஆகிய 3 அம்சங்கள் இதில் முக்கிய இடம் பெற்றன.
இந்தியச் சமூகத்தின் எதிர்காலத்திற்கான ஒருமித்த மற்றும் தரவுகள் அடிப்படையாகக் கொண்ட செயல் திட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
கலந்துரையாடலில் சில விஷயங்களை முக்கியமாகக் குறிப்பிட்ட நூருல் இசா, இந்தியச் சமூகம் இன்னமும் பிரச்னைகளை எதிர்நோக்குவதையும் அவர்களுக்கு ஆதரவும் உதவியும் அவசியம் என்பதையும் ஒப்புக் கொண்டார்.
இதற்கு, தேசிய அளவில் ஒரு முறையான தொடர்பு அணுகுமுறையும் அவசியம்; அதன் வாயிலாகவே அரசாங்க உதவிகள் அவர்களைப் போய் சேருவதை உறுதிச் செய்ய முடியும்.
அதே சமயம், நடப்பு அரசியல் சூழலில் உள்ள சவால்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில் உருமாற்றத்தை எப்படி ஏற்றுக்கொள்வது, நீடித்த வளர்ச்சியை உறுதிச் செய்வது, சவால்களை திடமாக எதிர்கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு என சார்ல்ஸ் சாந்தியாகோ குறிப்பிட்டார்.
கோப்பியோவின் ரவிந்திரன், வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, தமிழ் அறவாரியத்தின் சுப்பிரமணியம், சமூக ஆர்வளர் குணசேகரன் போன்றோரும் இதில் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
கலந்துரையாடலில் பெறப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும், 13-ஆவது மலேசியத் திட்ட முன்வரைவுக்காக அரசாங்கத்தின் கவனத்துக்குச் கொண்டுச் செல்லப்படுமென, ஏற்பாட்டாளர்கள் கூறினர்.