
கோலாலாம்பூர், அக்டோபர்-15,
தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie Ching) தலைமையில், Tabung Kasih@HAWANA திட்டத்தின் கீழ் உடல் நலம் மற்றும் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் 16 ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் தீபாவளி சிறப்பு உதவிகள் வழங்கப்பட்டன.
‘Sinari Harapan, Utuhkan Perpaduan’ அதாவது “நம்பிக்கையை ஒளிரச் செய், ஒற்றுமையை வலுப்படுத்து”என்ற கருப்பொருளில், தேசிய செய்தி நிறுவனமான விஸ்மா பெர்னாமாவில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இது மடானி அரசின் கருணை, ஒற்றுமை மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் மனப்பான்மையை பிரதிபலிப்பதாக தியோ நீ சிங் சொன்னார்.
2023 ஏப்ரல் மாதம் தேசிய செய்தியாளர் தினம் HAWANA-வை முன்னிட்டு தொடங்கப்பட்ட இம்முயற்சி, இதுவரை 532 ஊடகத்துறையினருக்கு பலனளித்துள்ளது.
இத்திட்டத்தை தொடர்புத் துறை அமைச்சும் பெர்னாமாவும் இணைந்து நடத்துகின்றன.
பெறுநர்களுக்கு நிதியுதவியுடன், பரிசுக் கூடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தொடர்புத் துறை அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்ரன், பெர்னாமா தலைவர் டத்தோ ஸ்ரீ வோங் சூன் வாய், பெர்னாமா தலைமை செயல் அதிகாரி Nur-ul Afida Kamaludin, பெர்னாமா தலைமை செய்தியாசிரியரும் 2025 HAWANA இயக்குநருமான அருள் ராஜூ துரை ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மலேசிய ஊடகத்துறையினரின் நலனையும் மரியாதையையும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அக்கறையை இந்நிகழ்ச்சி புலப்படுத்தியது.