Latestமலேசியா

16 வயதுக்குட்பட்டவர்களுக்கான தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கிண்ண தேசியக் கால்பந்து போட்டி; MIED முன்னெடுப்பு

பாசீர் கூடாங், ஏப்ரல்-12- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கிண்ண தேசியக் கால்பந்துப் போட்டி, ஜோகூர், பாசீர் கூடாங் மாநகரத் திடலில் இன்று தொடங்கியது.

முதன் முறையாக நடைபெறும் இப்போட்டியை, ம.இ.காவின் விளையாட்டுப் பிரிவு, ம.இ.காவின் கல்விக் கரமான MIED, மலேசிய இந்தியர் விளையாட்டு சங்கமாக MIFA ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ Dr ஆர். நெல்சன் இன்றையத் தொடக்க விழாவுக்கு சிறப்பு வருகைப் புரிந்தார்.

அவருடன், ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில இந்தியர் கால்பந்து சங்கமான JIFA-வின் தலைவருமான ரவின் குமார் கிருஷ்ணசாமியும் உடன் வந்தார்.

கெடா முதல் ஜோகூர் வரை மொத்தம் 16 குழுக்களைச் சேர்ந்த 400 ஆட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதாக, ம.இ.கா மற்றும் MIED விளையாட்டுப் பிரிவின் தலைவர் அண்ட்ரூ டேவிட் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

இப்போட்டியின் வழி, தொழில்முறையிலான கால்பந்து கிளப்பில் சேர்த்துக் கொள்ள தகுதியான திறமை வாய்ந்த ஆட்டக்காரர்கள் அடையாளம் காணப்படுவர் என்றார் அவர்.

இந்திய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதோடு நின்று விடாமல், விளையாட்டுத் துறையிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அண்ட்ரூ வலியுறுத்தினார்.

இதைத் தான் AIMST பல்கலைக்கழக வேந்தருமான தான் ஸ்ரீ விக்னேஸ்வரனும் விரும்புகிறார்; எல்லா வீட்டிலிருந்தும் பிள்ளைகள் பல்கலைக் கழகம் போகும் அதே சமயம், விளையாட்டிலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என அவர் ஊக்குவிக்கிறார்.

அதன்படியே இம்முயற்சி தொடங்கியுள்ளது; அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இப்போட்டி தொடருமென அண்ட்ரூ கூறினார்.

பூர்வாங்க ஆட்டங்கள் அனைத்தும் இன்று நடைபெறும் நிலையில் அரையிறுதி ஆட்டங்களும், இறுதியாட்டமும் நாளை நடைபெறும்.

சுற்று வட்டார மக்கள் திரண்டு வந்து நம் மாணவர்களை ஊக்கப்படுத்துமாறும் அண்ட்ரூ கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!