
கோலாலம்பூர், மே-16 – தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் ஜோ லோவை, நீதி விசாரணைக்கு மலேசியா கொண்டு வந்தால், சிலரின் வயிற்றில் அது புளியைக் கரைக்கலாமென, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஜோ லோ வந்தால் பல உண்மைகள் அம்பலமாகி தங்களின் வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறி விடுமென அவர்கள் பயப்படலாம்.
எனவே 1MDB நிதி ஊழலில் தேடப்படும் ஜோ லோ மீண்டும் தாயகம் திரும்புவதில் சில தரப்பினர் ஆர்வமாக இருக்க மாட்டார்கள் என்றார் அவர்.
Al-Jazeera-வின் 101 East தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, ஜோலோவை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை குறிப்பிட்ட சில தரப்புகள் விரும்பவில்லையா என கேட்கப் பட்ட போது, பிரதமர் அவ்வாறு சொன்னார்.
ஆனால், பிரதமர் என்ற முறையில் முன்னுரிமைக் கொடுக்க வேண்டிய ஒரே விஷயமாக இந்த ஜோ லோ விஷயத்தைத் தாம் கருதவில்லை; அரசு நிர்வாகம், ஊழல் துடைத் தொழிப்பு என பல்வேறு விஷயங்களை தாம் கவனிக்க வேண்டியிருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
வெறும் 1MDB-யில் ஆரம்பித்து 1MDB-யிலேயே முடியும் விஷயமல்ல இது என்றார் அவர்.
இவ்வேளையில், ஆண்டுக் கணக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் ஜோ லோவை தாயகம் கொண்டு வருவது இயலாதக் காரியமாக இருக்கிறதே, ஒருவேளை அவர் சீனாவில் தான் இருக்கிறாரோ என்றும் பிரதமரிடம் கேட்கப்பட்டது.
ஆனால், அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்குமே தெரியாது என்பது தான் உண்மையென டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
ஜோ லோவை கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், ஆனால் பன்னாட்டு ஒத்துழைப்பையும், உளவுத் தவல்களையும் உட்படுத்தியிருப்பதால், அது சற்று கடினமான பணியே என்றும் 2023-ல் பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.