
சிரம்பான், பிப்ரவரி 3 – மலேசிய கல்வி அமைச்சு மார்ச் மாதம் முதல் 20,000 ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்க உள்ள நிலையில், இதனால் தற்போதுள்ள காத்திருப்பு ஆசிரியர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படாது என துணை கல்வி அமைச்சர் Wong Kah Woh உறுதி அளித்துள்ளார்.
நேர்காணலில் தேர்ச்சி பெற்ற காத்திருப்பு ஆசிரியர்கள், ஆரம்ப அல்லது இடைநிலைப் பள்ளிகளில், தேவைக்கேற்ப பணியமர்த்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக கல்விச் சேவை ஆணையத்துடன் (SPP) அமைச்சு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, DG9 தர ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 2 முதல் 20 வரை விண்ணப்பங்கள் திறக்கப்படும் என கல்வித் துறை தலைமை இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்த நியமனம், RPM 2026 – 2035 திட்டத்திற்கான முன்னேற்பாடாகவும், அடுத்த ஆண்டு முதல் வகுப்பில் சேரும் இரண்டு மாணவர் குழுக்களை சமாளிக்கவும் மேற்கொள்ளப்படுகிறது.



