
கோலாலம்பூர், மே-24 – கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் உட்கொண்டதற்காக ஒரு பெண்ணுக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்களை சீர்திருத்துமாறு ஒரு சுகாதார சிந்தனைக் குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
திட்டமிடப்படாத கர்ப்பங்களின் மூலக் காரணங்களை புறக்கணித்து, பெண்களை குற்றவாளிகளாக்கும் காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக, சுகாதாரம் மற்றும் சமூகக் கொள்கை மையத்தின் தலைமை செயலதிகாரி அஸ்ருல் காலிப் கூறினார்.
“எந்தவொரு பெண்ணும் தனது உடலின் மீது சுயாட்சியைப் பயன்படுத்துவதற்காக சிறையை எதிர்கொள்ளக்கூடாது” என ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் கருக்கலைப்புச் சட்டங்கள் 19-ஆம் நூற்றாண்டின் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை; அவை நவீன மருத்துவத் தரங்களையோ அல்லது இளம், ஏழை அல்லது திருமணமாகாத பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையோ பிரதிபலிக்கவில்லை என அஸ்ருல் வாதிடுகிறார்.
சில நிபந்தனைகளின் கீழ் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும், களங்கமாகப் பார்க்கப்படுமோ என்ற ஒரு வித தவறான கண்ணோட்டத்தாலும் சேவைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்களாலும் பெரும்பாலும் பெண்கள் பாதுகாப்பற்ற முறைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
2022-ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் கணக்கெடுப்பின் படி, நாட்டில் மூன்றில் ஒரு கர்ப்பம் திட்டமிடப்படாதது என்றும், 25% க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு கிடைக்கவில்லை என்றும், நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு 35% க்கும் குறைவாகவே இருந்தது என்றும் அவர் கூறினார்.
கர்ப்பத்தின் 12 வாரங்கள் வரை சுயமாக நிர்வகிக்கப்படும் கருக்கலைப்புக்கு mifepristone மற்றும் misoprostol ஆகிய மாத்திரைகளின் பயன்பாட்டை உலக சுகாதார நிறுவனமான WHO ஆதரிக்கிறது.
ஆனால், மலேசியாவில் mifepristone பதிவுச் செய்யப்படவில்லை; அதே சமயம் misoprostol இரைப்பை புண்களுக்கு சிகிச்சையளிக்க மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே கட்டுப்பாட்டுச் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், சுகாதாரப் பணியாளர்களிடையே கருக்கலைப்பு வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் கருத்தடை மற்றும் ஆலோசனைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் அஸ்ருல் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
மலாக்காவில் வயிற்றிலேயே குழந்தையைக் கலைத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட 21 வயது பெண்ணுக்கு, ஆயர் குரோ மேஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னதாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
தனது ஐந்து மாத கர்ப்பத்தை கலைக்க இணையம் வாயிலாக 600 ரிங்கிட்டுக்கு misoprostol அவர் வாங்கியுள்ளார்.