
கோலாலம்பூர், ஜூன்-10 – வட மாநிலங்களுக்கான KTMB-யின் 3 வழித்தடங்களில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு முறையை உட்படுத்திய கேபிள் திருட்டுச் சம்பவத்தால், நேற்று இரயில் சேவைகள் 1 மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டன.
வட பகுதிகளுக்கான KTM கம்யூட்டர் மற்றும் ETS இரயில் சேவைகள் என இரண்டுமே தடங்கல்களைச் சந்தித்தன.
தாப்பா ரோட் – சுங்காய் வழித்தடத்தில் 200 மீட்டருக்கு கேபிள்கள் திருடப்பட்டன;
கமுந்திங் – புக்கிட் மேரா – பாகான் செராய் வழித்தடத்தில் 110 மீட்டருக்கும், சிம்பாங் அம்பாட் – புக்கிட் மெர்தாஜாம் வழித்தடத்தில் 40 மீட்டர் வரையிலும் கேபிள்கள் திருடப்பட்டன.
இதனால் 80 முதல் 115 நிமிடங்கள் வரை இரயில்கள் தாமதமாகின.
ETS இரயில் சேவைகளில் KL Sentral- Butterworth, Butterworth-Segamat, Butterworth-KL Sentral, Padang Besar-KL Sentral, Segamat-Padang Besar ஆகியவை பாதிக்கப்பட்டன.
வட பகுதிக்கான KTM கம்யூட்டர் சேவையில் ஈப்போ – பட்டவொர்த் – ஈப்போ வழித்தடத்தில் 30 நிமிடங்களுக்கு தாமதம் ஏற்பட்டது.
சேவைத் தடங்கல் குறித்து பயணிகளுக்கு SMS குறுந்தகவல் வாயிலாகவும் KTMB-யின் சமூக ஊடகங்களில் வழியாகவும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன.
கடந்த ஜனவரி முதல் மே வரை வட பகுதிகளில் 45 கேபிள் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்தாண்டு நிகழ்ந்த கேபிள் திருட்டால் KTMB மொத்தமாக 1.28 மில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்த வேளை, இவ்வாண்டு மார்ச் வரை மட்டுமே 162,000 ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது.