
ஜோர்ஜ் டவுன், ஜூன் 25 – ஜோர்ஜ் டவுன் ஜலான் லிந்தாங் மெர்டேகா (Jalan Lintang Merdeka) பகுதியில் இருந்த ஒரு காரில், நான்கு நாட்களுக்கும் மேலாக இறந்திருக்கலாம் எனக் கருதப்படும் உள்ளூர் ஆடவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
தூய்மைப் பணியில் ஈடுபடும் ஊழியரிடமிருந்து காலை மணி 9.50 அளவில் இச்சம்பவம் குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அப்துல் ரோசாக் முகமட் (Abdul Rozak Muhammad ) தெரிவித்தார்.
காலை மணி 9.30 க்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வாகனம் சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்ததை அந்த ஊழியர் கண்டுள்ளார்.
அக்காரில் போலீசார் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் புக்கிட் மெர்தாஜம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரின் உடல், பூட்டப்படாத நிலையில் இருந்த அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் முழுமையாக ஆடை அணிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது.
அவரது உடல் மற்றும் சம்பவம் நடந்த இடத்தைப் பரிசோதித்ததில் குற்றச் செயல் தொடர்பான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அந்த ஆடவர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.



