
வாஷிங்டன், ஆகஸ்ட் 14 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை ஈரான் கொலை செய்ய முயற்சிக்கலாம் என இஸ்ரேல், அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு முதல் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான், துப்பாக்கி சுடும் நபர் அல்லது கத்தியால் தாக்கும் நபரை பயன்படுத்தி டிரம்பை கொலை செய்ய முயற்சிக்கலாம் என இஸ்ரேல் எச்சரித்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற நாட்டோ (NATO) மாநாட்டிற்குச் செல்லும் வழியில், டிரம்ப் பயணிக்கும் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்க ஈரான் முயற்சிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் துருக்கி உளவுத்துறை இதற்கான உறுதியான ஆதாரங்களை கண்டறியவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், துருக்கியில் அவர் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



