அலோர் ஸ்டார், செப்டம்பர் -8 – வெள்ளமேறியப் பகுதிகளில் விளம்பர நோக்கத்திற்காக content செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை காத்திருக்கிறது.
கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபீசோல் சாலே (Datuk Fisol Salleh) அவ்வாறு எச்சரித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கவலைப்படாமல், தங்களின் சமூக ஊடக விளம்பரத்திற்காக வீடியோ எடுப்பது முறையற்றது என்றார் அவர்.
பேரிடர்கள் குறித்த முக்கிய தகவல்களை அதிகாரத் தரப்புக்கு கொடுத்துதவக் கூடிய உள்ளடக்கங்கள் என்றால் கூட பரவாயில்லை.
ஆனால் வெறுமனே சமூக ஊடக பிரபல்யத்திற்காக வெள்ளப் பகுதிகளில் வீடியோ செய்தால், அதை அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
வெள்ளமேறிய ஆபத்தான இடங்களிலிருந்து யாராவது நேரலை செய்வது கண்டறியப்பட்டால், அது முடக்கப்பட்டு அவர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென டத்தோ ஃபீசோல் நினைவுறுத்தினார்.
வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போரில் சிலர், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதற்காக வீடியோக்களை எடுக்க வெள்ளமேறியப் பகுதிகளுக்குப் புறப்பட்டு விடுவது குறித்து அவர் கருத்துரைத்தார்.