
அம்பாங் ஜெயா , நவ 5 – அம்பாங் ஜெயாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பூனையை பெரிய வலைக்குள் போட்டு சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று துன்புறத்திய 60 வயது மதிக்கத்தக்க ஆடவருக்கு எதிராக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அண்டை வீட்டுக்காரரான 26 வயதுடைய இந்தோனேசிய பெண் ஒருவரிடமிருந்து போலீஸ் புகாரை பெற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Azam Ismail தெரிவித்தார்.
வலைக்குள் இருந்த அந்த பூனையை விடுவிக்கும்படி சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது கணவர் மற்றும் குடியிருப்பு வாசிகளும் பல முறை கேட்டுக்கொண்ட போதும் அந்த ஆடவர் அதனை புறக்கணித்ததோடு இந்த சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது. அந்த பூனை தனது
வீட்டின் முன் எப்போதும் மலம் கழிப்பதால் அந்த ஆடவர் அதைனை துன்புறத்தியிருக்கலாம் என நம்பப்படுவதாக முகமட் அஸ்ஸாம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். அந்த நபரை கண்டறிந்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்டனைச் சட்டத்தின் 428 ஆவது விதி , பிராணிகள் சமூக நல சட்டத்தின் 29 ஆவது விதி , உட்பிரிவு (1) (e) பிரிவின் கீழ் மற்றும் மலேசிய பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறது.