
கோலாலம்பூர், டிசம்பர்-18, நாடு முழுவதும் 12 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 40 இணைய மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை 63 மோசடி அழைப்பு மையங்களில் அச்சோதனைகள் நடத்தப்பட்டன.
அவற்றில் 95 பெண்கள் உட்பட மொத்தமாக 426 பேர் கைதானதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ரம்லி யூசோஃப் (Datuk Seri Ramli Mohamed Yoosuf) கூறினார்.
அவர்களில் 146 பேர் மலேசியர்கள், 224 பேர் சீன பிரஜைகள்; மற்றவர்கள் தாய்லாந்து, இந்தோனீசியா, நைஜீரியா, பாகிஸ்தான், யுக்ரேய்ன், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இணையச் சூதாட்டம், முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு மோசடி, இணைய வர்த்தக மோசடி, காதல் மோசடி, நன்கொடை மோசடி மற்றும் ஆபாசப் படங்களை பிரபலப்படுத்துதல் போன்றவற்றில் அக்கும்பல்கள் ஈடுபட்டு வந்துள்ளன.
உள்நாட்டினர் மட்டுமின்றி, இங்கிருந்தே அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், வியட்நாம் வரை அழைப்பதை இந்த call centre-கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
தங்களிடம் சிக்குபவர்களை நம்ப வைக்க நிர்வாகி, மேலாளர், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, விளம்பர அதிகாரி, நிதி ஆலோசகர்கள் என பல ‘கதாபாத்திரங்களில்’ அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்கின்றனர்.
1,240 கைப்பேசிகள், 187 கணினிகள், 302 மடிக்கணினிகள், 41 ATM அட்டைகள், 6 வாகனங்கள், சுமார் 80,000 ரிங்கிட் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதலும் செய்யப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 1.48 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
கைதானவர்களில் இதுவரை 261 பேர் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்கள், பல்வேறு குற்றங்களுக்காக தொடர்ந்து விசாரிக்கப்படுவதாக டத்தோ ஸ்ரீ ரம்லி சொன்னார்.