Latestமலேசியா

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆலய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி; அமைச்சர் கோபிந்த் சிங் அறிமுகம்

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-27- பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அடுத்த மைல் கல் சாதனையாக, இந்து ஆலயங்களின் டிஜிட்டல் மயமாக்கல் அமைந்துள்ளது.

பாரம்பரியமும் தொழில்நுட்பமும் ஒன்றிணையும் இம்முயற்சியை, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்றிரவு அறிமுகம் செய்து வைத்தார்.

அறப்பணி வாரியத்தின் அம்முயற்சி தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற ஒன்று என பாராட்டிய கோபிந்த், ஆலயங்களின் டிஜிட்டல் மயமாக்கலை தமதமைச்சு தொடர்ந்து ஆதரித்து வருமென்றார்.

பட்டவொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், பினாங்கு முன்னாள் முதல் அமைச்சர் லிம் குவான் எங், இந்து அறப்பணி வாரித்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் Dr.லிங்கேஷ்வரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பினாங்கு ம.இ.கா தலைவர் ஜெ. தினகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியானது, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழுள்ள பால தண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ இராமர் கோயில், குவின்ஸ் ஸ்திரீட் மாரியம்மன் கோயில், ஸ்ரீ கிருஷ்ண குஞ்ச் பிஹாரி மந்திர் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களை உட்படுத்தியிருக்கும்.

பக்தர்களுக்கு சுமூகமான சேவைகள், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் மேம்பட்ட வசதியை இந்த டிஜிட்டல் மயமாக்கல் வழங்குகிறது.

டிஜிட்டல் கியோஸ் இயந்திரங்கள் முதல் புதுப்பிக்கப்பட்ட ஆலய மேலாண்மை அமைப்புகள் வரை, புனித மரபுகளைப் பாதுகாக்கும் அதே வேளை நவீனமயமாக்கலையும் ஏற்றுக்கொள்வதாக, அறப்பணி வாரியம் கூறியது.

இந்த உருமாற்று திட்டத்திற்கு துணை நின்ற தலைவர்கள், ஆலய நிர்வாகங்கள், பக்கர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றி.

இதே உணர்வோடு, ஒற்றுமை, பெருமை, புத்தாக்கத்தோடு தொடர்ந்து பீடு நடைப் போடுவோம் என, வாரியத் தலைவர் RSN ராயர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!