
வாஷிங்டன், மே 6- தாமாக முன்வந்து, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முன்வரும் சட்டவிரோத குடியேறிகளுக்கு, அமெரிக்க அரசு 1,000 அமெரிக்க டாலர்களை ரொக்கமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த அமலாக்கம், அமெரிக்காவில், சட்ட விரோதமாக வசித்து வருபவர்களை பாதுகாப்பான முறையில் அவரவர் நாட்டிற்கு அனுப்பும் ஒரு அற்புதமான வாய்ப்பு என்கின்றார் அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிரிஸ்தி நோம் (Kristi Noem).
மேலும் இந்த முயற்சி, நாடுகடத்தல் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். சராசரியாக, ஒரு வெளிநாட்டு குடியேறியைக் கைது செய்து, நாடு கடத்துவதற்கு தற்போது 1,700 அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
ஆக இம்முயற்சி, சட்ட விரோத குடியேறிகள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பும் வாய்ப்பை ஏற்படுத்துவதோடு உள்நாட்டு செலவீனத்தைக் கணிசமாக குறைக்கவும் உதவும் என்றார் அவர்.