
கோத்தா திங்கி, மே 14- நேற்றிரவு, ஜாலான் ஜோகூர் பாரு-மெர்சிங், கிலோமீட்டர் (KM) 50-இல், சாலையைக் கடந்த நான்கு யானைகள் மீது, கார் ஒன்று மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வாகனம் மட்டுமே சேதமானதே தவிர, 40 மற்றும் 38 வயதுடைய தம்பதியினருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், யூசோப் ஓத்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் திடீரென 4 யானைகள் சாலையின் குறுக்கே வந்ததைத் தவிர்க்க முடியாமல் அவைகளின் மீது வாகனத்தைச் செலுத்தியதாக அத்தம்பதியினர் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, அந்த யானைக் கூட்டம், காட்டுப் பகுதிக்குள் சென்று நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) கணக்கெடுப்பின்படி, சம்பந்தப்பட்ட வனப்பகுதியில் சுமார் 30 முதல் 40 யானைகள் வசிப்பதாகவும், குறிப்பாக இரவு முழுவதும் அவை உணவு தேடி விவசாயப் பகுதிகளுக்குச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இச்சாலையையில் வனவிலங்கு கடக்கும் எச்சரிக்கை பலகைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, வாகனமோட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று PERHILITAN அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதே போன்று கடந்த அன்னையர் தினத்தன்று, நெடுஞ்சாலையில் குட்டி யானையொன்று, கார் மோதி இறந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது