Latestஉலகம்

மனிதப் பற்களை வளர வைக்கும் ஆராய்ச்சியில் ஜப்பானிய விஞ்ஞானிகள்

தோக்யோ, மே-21 – மனிதப் பற்களால் மீண்டும் வளர முடியாது.

ஒரு பல்லை இழந்தவுடன், புதிய ஒன்றைப் பொருத்தலாம், அல்லது வாயில் ஓட்டையுடன் காலத்தை ஓட்டலாம்.

ஆனால் வரும் ஆண்டுகளில் இந்நிலை மாறக்கூடும்.

ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் மீண்டும் பற்களை வளர்க்கக்கூடிய ஒரு மருந்தை கண்டுபிடித்து வருவதே அதற்குக் காரணம்.

அது ஏற்கனவே மனித சோதனை கட்டத்தில் உள்ளது.

USAG-1 என்றழைக்கப்படும் கருப்பை உணர்திறன்-தொடர்புடைய மரபணு, ferret எனப்படும் மரநாய்கள் மற்றும் எலிகளில் பற்கள் வளர்வதைத் தடுப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த USAG-1 மரபணுவை கட்டுப்படுத்தினால் பல் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்பதே விஞ்ஞானிகளின் கணக்கு.

ஆனால், கண்டுபிடிப்பை உறுதிச் செய்ய இது போதுமானதா என்பது தெரியாது என அவர்கள் உண்மை நிலவரத்தைக் கூறினர்.

மனிதர்கள் மீதான இச்சோதனை கடந்த ஆண்டு தொடங்கி 11 மாதங்கள் நீடிக்கும்.

இதில் 30 முதல் 64 வயதுக்குட்பட்ட 30 ஆண்களுக்கு மருந்து நரம்பு வழியாக செலுத்தப்பட்டு, அது செயல்படுகிறதா, பாதுகாப்பாக உள்ளதா என்பது சரிபார்க்கப்படுகிறது.

முந்தைய விலங்கு ஆய்வுகளில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.

எனவே மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் இந்த சோதனைகள் வெற்றி பெற்றால், குறைந்தது நான்கு பற்கள் இல்லாத குழந்தைகளுக்கு (2-7 வயது) இந்த மருந்து வழங்கப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் பல் வளரும் மருந்தை கிடைக்கச் செய்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடக்கத்தில், பிறவி பல் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே இதைப் பெறுவார்கள்.

பின்னர், பல் இழந்த மற்றவர்களுக்கு உதவ முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!