
கோலாலம்பூர், ஜூலை-18 – மலேசியாவில் 14 வயது சிறார்களுக்குக் கூட இரண்டாம் வகை நீரிழிவு நோய் கண்டறியப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆய்வுகளின்படி, இளம் வயதினரிடையே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவது நாட்டின் பொது சுகாதாரத்திற்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உடல் உழைப்பு குறைபாடு மற்றும் துரித உணவுகளைச் சார்ந்திருக்கும் போக்கு ஆகியவை இளைஞர்களிடையே இந்நோய் பரவுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
எனவே, பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிச் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என Dr சுல்கிஃப்ளி வலியுறுத்தினார்.
“இளம் வயதிலேயே நீரிழிவு நோய் கண்டறியப்படுவது, எதிர்காலத்தில் அவர்களைப் பல்வேறு தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்” என அவர் எச்சரித்தார்.
சீனிச் சத்து நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளைத் தவிர்ப்பது, உடற்பயிற்சிகளை அன்றாட வழக்கமாக்கிக் கொள்வது போன்றவற்றின் மூலம் இந்த ஆபத்தைத் தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதே சமயம் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறது.
எதிர்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தைக் காக்க, இப்போதே விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாவதாக அமைச்சர் மேலும் சொன்னார்.



