
கோலாலாம்பூர், ஜூன்-11 – பேராக், கெரிக்கில் UPSI பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரை பலிகொண்ட விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Kenari Utara என்ற அந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளுக்கான செயல்பாட்டு பெர்மிட்டுகளும் இரத்தாகின்றன.
பேருந்து நடத்துநர் சில முக்கிய விதிமுறைகளை மீறியிருப்பதை அடுத்து பெர்மிட்டை மீட்டுக் கொள்வதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.
செயல்பாட்டு உரிமத்தை மாதம் 500 ரிங்கிட் என்ற கட்டணத்தில் மூன்றாம் தரப்புக்கு குத்தகைக்கு விட்டது, GPS எனப்படும் புவியிடங்காட்டி முறையை செயல்படுத்தத் தவறியது உள்ளிட்டவை அந்த விதிமீறல்களாகும்.
அந்நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடியுமென்றாலும், அதனை அமைச்சு பரிசீலிக்கப்போவதில்லை என அந்தோணி லோக் திட்டவட்டமாகக் கூறினார்.
விபத்துக்குள்ளான பேருந்து கடந்த மாதம் தான் பராமரிப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக, Kenari Utara முன்னதாகக் கூறியிருந்தது.
அதே சமயம், அதன் ஓட்டுநர் இன்னொரு பேருந்து நிருவனத்திலிருந்து ‘இரவல்’ வாங்கப்பட்டவர் என்றும், தொழிலில் அனுபவம் வாய்ந்ததோடு, கெரிக்-ஜெலி பாதையை ‘கரைத்துக் குடித்தவர்’ என்றும் அது கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், சம்பவத்தின் போது பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என அவ்வோட்டுநர் கூறியிருப்பது குறித்து கருத்துரைத்த அந்தோணி லோக், “அவர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்; நாங்கள் முழு தடயவியல் சோதனையை மேற்கொண்டு அவரின் கூற்று உண்மையா இல்லையா என்பதை கண்டறிவோம்” என்றார்.