
ஜெர்த்தே, ஜூன்-18 – இல்லாத ஒரு ஹோமியோபதி மருத்து வணிகத்தை இருப்பதாகக் கூறி 43 வயது மாதுவை 52,000 ரிங்கிட்டுக்கு மோசடி செய்த ஆடவர் திரங்கானு, ஜெர்த்தேவில் கைதாகியுள்ளார்.
40 வயது அவ்வாடவர் கிளந்தான், மாச்சாங்கில் நேற்று பிற்பகலில் கைதானதாக, பெசூட் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் அசாமுடின் அஹ்மாட் @அபு கூறினார்.
கடந்தாண்டு MiChat செயலியின் வாயிலாக அறிமுகமான அவ்வாடவர் தம்மை ஏமாற்றியதாக அப்பெண் போலீஸில் புகாரளித்துள்ளார்.
ஹோபியோபதி மருந்து இயந்திரத்தை வாங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் கடந்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 2 முறை அம்மாது சந்தேக நபருக்கு பணத்தை மாற்றியுள்ளார்.
கடைசியாக கடந்த வாரம் வெள்ளிக் கிழமை செபராங் ஜெர்த்தேவில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் நேரில் சந்தித்த போது, 7,000 ரிங்கிட் ரொக்கத்தை அம்மாது ஒப்படைத்துள்ளார்.
வணிகப் பொருட்களை வாங்குவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் என அவரிடம் கூறப்பட்டுள்ளது.
கட்டணத்திற்கான இரசீதுகளைக் கேட்ட போது, கொடுக்காமல் அவ்வாடவர் பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறியதோடு, தொடர்பிலிருந்து காணாமல் போனதும் அம்மாதுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்தே அவர் போலீஸில் புகார் செய்தார். பறிகொடுத்த பணம் அத்தனையும் அவரின் வாழ்நாள் சேமிப்பு, காலஞ்சென்ற கணவர் விட்டுச் சென்றது மற்றும் நகைகளை அடகு வைத்ததன் மூலம் கிடைக்கப் பெற்றவையாகும்.