
கூலாய், ஜூன்-26 – ஜோகூர் கூலாய் அருகே, PLUS நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதோடு, அவசரப் பாதையில் முந்திச் சென்ற விரைவுப் பேருந்து ஓட்டுநர் வைரலாகியுள்ளார்.
தனக்கு பின்னால் உள்ள வாகனங்கள் ஹாரன் அடித்ததால் ‘சினமடைந்த’ அந்நபர், அவர்களை நோக்கி ஆபாச சைகை புரிந்ததும், ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட 26 வினாடி வீடியோவில் பதிவாகியுள்ளது.
அது குறித்து போலீஸ் புகார் பெறப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய கூலாய் போலீஸ் தலைவர் துணை ஆணையர் தான் செங் லீ, ஓட்டுநர் மீதான விசாரணை நடைபெற்றிருப்பதாகக் கூறினார்.
எனினும், வைரலான வீடியோவைப் பதிவுச் செய்தவர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர வாகனமோட்டிகள் குறித்து தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
எனவே சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால், விசாரணைக்கு முன்வந்து உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக வைரலான வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், அப்பேருந்து ஓட்டுநரின் செயல் குறித்து முகம் சுளித்ததோடு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.