
பெனாம்பாங், நவம்பர்-16 – சபா மீது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காட்டி வரும் தொடர் அக்கறையும் அர்ப்பணிப்பும், ஒற்றுமை அரசாங்கம் மீதான அம்மாநில வாக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கூறியுள்ளார்.
சபாவுக்கு பிரதமர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் தெளிவான கொள்கைகள் மற்றும் தெளிவான கடப்பாடுகளைக் கொண்டுள்ளது.
எனவே வளர்ச்சியும் நிலையான தலைமைத்துவமும் கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ரமணன் கூறினார்.
பெனாம்பாங் மாவட்டத்திற்குட்பட்ட Moyog சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Remysta Jimmy Taylor-ரை ஆதரித்து தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்ட பிறகு, தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சருமான அவர் அவ்வாறு சொன்னார்.
சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அப்பிரச்சாரங்களில் சுமார் ஆயிரம் PH ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
Moyog தொகுதியில் PH மற்றும் GRS கூட்டணிகளுக்கிடையில் கடும் போட்டி நடைபெறவுள்ளது.
வேட்புமனுத் தாக்கலோடு 17-ஆவது சபா மாநிலத் தேர்தல் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மொத்தமுள்ள 73 தொகுதிகளுக்கு நவம்பர் 29-ல் தேர்தல் நடக்கிறது.



