
செப்பாங், டிசம்பர்-2 – ஐரோப்பிய ஒன்றிய வான் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமான EASA வெளியிட்ட அவசர விமானத்தகுதி உத்தரவுக்கு (Emergency Airworthiness Directive) தேவையான அனைத்தையும் பூர்த்திச் செய்ததை அடுத்து, ஏர் ஏசியாவின் சேவை முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.
விமானத் தயாரிப்பு நிறுவனமான Airbus விடுத்த Operators Transmission எச்சரிக்கையைத் தொடர்ந்து, EASA அந்த உத்தரவை வழங்கியிருந்தது.
அளவுக்கதிகமான சூரிய கதிர்வீச்சு காரணமாக விமான கட்டுப்பாட்டு மென்பொருள் தரவு செயலிழக்கும் என கண்டறியப்பட்டதால், உலகெங்கும் உள்ள A320 குடும்ப விமானங்கள் அடுத்து பறப்பதற்குள் அவற்றின் மென்பொருள் பழையப் பதிப்புக்கே மாற்றப்பட வேண்டுமென Airbus கூறியிருந்தது.
அவ்வகையில், AirAsia Aviation Group தேவையான மென்பொருள் மாற்றங்களை தனது A320 இரக விமானங்களில் வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளது.
வட்டார அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், 24 மணி நேரங்களுக்குள் அப்பணிகள் முழுமைப் பெற்றன.
இதன் மூலம், ஏர் ஏசியாவின் அனைத்து விமானங்களும் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன; பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையும் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக, அறிக்கையொன்றில் அந்த மலிவுக் கட்டண விமான குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கம் கூறினார்.
இந்த ஒருங்கிணைந்த உடனடி பதில் நடவடிக்கையானது, ஏர் ஆசியாவை வரையறுக்கும் சுறுசுறுப்பு, பயணிகளுக்கு முன்னுரிமை மற்றும் குழு உணர்வை பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.
இந்நிலையில், ஏர் ஏசியாவில் பறக்கும் பயணிகள் தங்களது ஆக அண்மையப் பயண விவரங்களை AirAsia MOVE செயலி அல்லது airasia.com/flightstatus -சில் சரிபார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.



