
கோலாலம்பூர், ஜனவரி 14 – கோலாலம்பூரில், மூன்று மாத வயதுடைய ஆண் குழந்தை, தனது பராமரிப்பாளர் வீட்டில் இருந்தபோது இடது தொடை எலும்பு முறிந்துள்ளதென்று பரிசோதனையின்போது தெரிய வந்துள்ளது. .
இந்த சம்பவம் ஜனவரி 9ஆம் தேதி, Taman Koperasi போலீஸ் பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குழந்தையின் இடது தொடையில் வீக்கம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். குழந்தை தொடர்ந்து அழுததால், பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு, குழந்தை அம்பாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் இடது தொடை எலும்பு முறிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து 27 வயதுடைய மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார். குழந்தைகள் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார், குழந்தைக்கு ஏற்பட்ட காயம் அலட்சியம் அல்லது துஷ்பிரயோகம் காரணமாக ஏற்பட்டதா என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
போலீசார் பொதுமக்களை, குழந்தைகள் பராமரிப்பாளர்களை தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் செலுத்தவும், சந்தேகத்திற்கிடமான காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி மற்றும் போலீசில் தகவல் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.



