
கோலாலாம்பூர், ஜனவரி-21 – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது உயர்கல்விக் கூடங்களில் உடனடியாக இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தது நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, PPKI Sentul Utama-வில் படித்து வரும் ஆட்டிசம் மாணவர் ராஜேந்திர வர்மன், ஒரு நெகிழ்ச்சியூட்டும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இவர் வேறு யாருமல்ல, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள் – வழக்கறிஞர் ராஜேஸ்வரி தம்பதியரின் ஆசைப் புதல்வராவார்.
மலேசிய சாதனைப் புத்தகம் அங்கீகரித்த ஆட்டிசம் கலைஞரான வர்மன், _“இலவச கல்வி என்பது கொள்கை அல்ல, நம்பிக்கையை அளிக்கும் ஒரு பரிசு” என்று வீடியோவில் தெரிவித்தார்.
குடும்பத்தினரின் மற்றுமோர் ஆச்சரியமாக, இந்த வீடியோ நேரடியாக பிரதமர் அன்வாரைச் சென்றடைந்துள்ளது.
வர்மாவின் பெற்றோரின் தகவலின்படி, அந்த வீடியோவை பிரதமரே பி.கே.ஆர் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களின் வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளார்.
“இச்சிறுவன் இப்படியே இருந்து விடக் கூடாது… இவனது திறமைகள் உலகிற்கு தெரிய வேண்டும்” என்ற நோக்கில், ஆரம்ப கட்டத்திலேயே வர்மாவை முதன்முறையாக பேட்டி எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே வணக்கம் மலேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “வர்மாவுக்கு நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறவோம்” என அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் வணக்கம் மலேசியாவுக்கு நன்றித் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் இந்த அரசாங்கத்தின் முடிவும், வர்மாவின் உண்மையான நன்றி உரையும், சமூக ஊடகங்களில் பலரின் மனதை தொட்டுள்ளது.



