
மக்கள் கொள்கை அறிக்கை 2.0: அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மதிப்பிட சமூகத்தின் குரலைக் கேட்கும் GBM
கோலாலாம்பூர், பிப்ரவரி-12,
அரசு சார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பான GBM, மக்கள் கொள்கை அறிக்கை அல்லது Manifesto Rakyat 2.0 எனப்படும் தேசிய அளவிலான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம், அடுத்த 5 மாதங்களுக்கு நாடு முழுவதும் மக்களின் கருத்துகள், சவால்கள், சீர்திருத்த பரிந்துரைகள் ஆகியவற்றை நேரடியாகக் கேட்டு பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரும் ஜூலை 6 வரை, கருத்துக் கணிப்புகள், பொதுக் கூட்டங்கள், பயணக் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் நேர்காணல்கள் மூலம், நகர்ப்புறம், கிராமப்புறம், சபா, சரவாக், மற்றும் சிறுபான்மை சமூகங்களின் குரல்கள் சேகரிக்கப்படும்.
GPM முன்னதாக 2020 மே மாதம், கல்வி, சுகாதாரம், ஜனநாயகம், சுற்றுச்சூழல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கி அதன் Manifesto Rakyat 1.0 கொள்கையை அறிக்கையை வெளியிட்டது.
அதனை அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் உள்ளிட்டவை தத்தம் தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்திருந்தன.
அப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் என்னென்ன நிறைவேற்றம் கண்டுள்ளது என்பதை ஆராய்ந்ததில், பெரும்பாலானவை முழுமைப் பெறவில்லை.
சில விஷயங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த பலன்களை அவை தரவில்லை என GPM முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்த Manifesto Rakyat 2.0 மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.
இந்த முறை, கொள்கை விவாதங்கள் மக்கள் மற்றும் சமூகங்கள், மக்கள் உரிமைகள், மக்கள் நலன், மக்கள் நிறுவனங்கள் என்ற 4 முக்கிய அடிப்படைகளின் கீழ் ஒழுங்கமைக்கப்படும்.
இறுதி ஆவணம் அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில் மலாய், ஆங்கிலம், தமிழ், சீனம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என நேற்றைய நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைப் போல அல்ல; மாறாக மக்கள் சார்ந்த, அடித்தளத்திலிருந்து உருவான, தேர்தல் காலங்களைத் தாண்டியும் தொடரும் தளம் எனும் தனித்தன்மை கொண்டது என GPM வருணித்தது.



