
‘ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனத்தின் மீது RM100 மில்லியன் இழப்பீடு கோரி அசாம் பாக்கி நோட்டீஸ்
கோலாலம்பூர், பிப்ரவரி 13 –
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி (Tan Sri Azam Baki), தன்னைப் பற்றிய அவதூறு செய்தி வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி ப்ளூம்பெர்க் ( Bloomberg) செய்தி நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியான கட்டுரையில், அவர் ‘வெலோஸிட்டி கெப்பிட்டல் பார்ட்னர்’ நிறுவனத்தில் (Velocity Capital Partner Bhd) 7.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை, அவர் தனது சொத்துகளைச் சட்டப்படி அறிவிக்கவில்லை என்றும், பங்கு வைத்திருப்பதில் ஏதேனும் முறைகேடு ஏற்பட்டிருக்கலாம் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கியது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தேவையான அனைத்து சொத்து அறிவிப்புகளும் மனிதவள மேலாண்மை தகவல் அமைப்பு (HRMIS) மூலம் சட்டப்படி சமர்ப்பிக்கப்பட்டதாகவும், குறிப்பிடப்பட்ட பங்குகள் செய்தி வெளியாகும் முன்பே விற்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், முதலீடுகள் அனைத்தும் சட்டபூர்வ வருமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட நோட்டீஸில், 14 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு வெளியிடவும், கட்டுரையை அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கவும் கோரப்பட்டுள்ளது. அதோடு, அவரது கண்ணியத்திற்கும் பதவியின் மரியாதைக்கும் ஏற்பட்ட பாதிப்பிற்காக சுமார் 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.



