
கோலாலம்பூர், மார்ச் 2 -ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கடுமையாக சாடினார்.
அந்த இரு நாடுகளும் மேற்கொண்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்பதோடு ஈரானின் இறையாண்மை கொள்கையை அவை மீறியிருப்பதாக அன்வார் விவரித்தார்.
மலேசியா உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு , சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான எந்தவொரு சர்ச்சையும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்புடன் உடனடி அமைதிக்காக நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பேச்சுக்கள் மூலம் ஒற்றுமைக்குத் திரும்புங்கள், இந்த வட்டாரத்தின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு பேச்சு நடத்த முன்வர வேண்டும் என அன்வார் அழைப்பு விடுத்தார்.
எதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும், ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் சுழற்சி தொடரும். இப்படிப்பட்ட சூழ்நிலை குறித்து ஏற்கனவே இஸ்ரேலியத் தலைவர்கள் பலர் வெளிப்படுத்தியிருப்பதோடு அவர்களின் தாக்குதல்களிலிருந்து துருக்கியும் தப்பாது என எச்சரிக்கை விடுத்துள்ளதையும் அன்வார் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் ஆதரவோடு ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டிக்கும் தீர்மானத்தை மக்களவையில் கொண்டுவந்தபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.



