
சுங்கை பூலோ, மார்ச்-7-நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் காணப்பட்ட MPV, சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குச் சொந்தமான வாகனம் தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 5-ஆம் தேதி பதிவான அந்த 12 வினாடி வீடியோவில், அந்த வாகனம் ஒரு இந்திய முஸ்லீம் உணவகத்தில் நிற்கிறது.
அப்போது ஒரு பணியாளர், 2 வெள்ளை பிளாஸ்டிக் பொட்டலங்களை ஓட்டுநரிடம் கொடுப்பதும் அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தது உறுதிச் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்ட் மொஹ்மட் ஹாஃபிஸ் முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.
அதிகார வாகனங்களை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் சிலர், ரமலான் நோன்பு நேரத்தில் திருட்டுத்தனமாக உணவு வாங்கப்படுகிறதோ என சந்தேகத்தை எழுப்பிய நிலையில், காரின் உள்ளே இருந்தது முஸ்லீமா இல்லையா என எதுவும் தெரியாமல் யூக அடிப்படையில் பேசக் கூடாது என்று மற்றவர்கள் கருத்துரைத்தனர்.



