
சிரம்பான், மார்ச்-15-சிரம்பானில் அமைந்துள்ள ம.இ.காவின் டேஃப் கல்லூரி 20 மில்லியன் ரிங்கிட் செலவில் உருமாற்றம் கண்டு வருகிறது.
1988-ஆம் ஆண்டு அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். சாமிவேலுவின் தூரநோக்கு முயற்சியில் இக்கல்லூரி அமைக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வர்த்தகம் போன்ற தொழில்துறைகளில் இந்திய மாணவர்களின் சக்திக்குட்பட்ட உயர் கல்வியை வழங்கும் நோக்கில் இது அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தாலும், நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப இந்த பெரிய உருமாற்றம் அவசியமாவதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.
குறிப்பாக கடந்த காலங்களில் இருந்ததை விட 2 மடங்கு அதிகமாக கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு நவீன LED வசதிகள், குளிரூட்டி வசதியுடைய வகுப்புகள், சமையல் கலை வகுப்புகள் TVET தொழில்பயிற்சிகளும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
ம.இ.காவின் கல்விக் கரமான MIED-யின் அறங்காவலர் டத்தோ டி.மோகனின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த புதிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை நிறைவடைந்ததும் டேஃப் கல்லூரி முற்றிலும் புதியத் தோற்றத்தில் காட்சியளிளிக்கும்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழம் போல், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து சாரா மாணவர்களின் முக்கியத் தேர்வாக விளங்கும் உயர் கல்விக் கூடமாக டேஃப் உருமாறும் என்றார் அவர்.
டேஃப் கல்லூரியில் இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்வுக்குப் பிறகு விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில் டத்தோ டி.மோகன், டேஃப் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா சாஹுல் ஹமீட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்டட மேம்பாட்டுப் பணிகளையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.



