
கோலாலம்பூர், மார்ச்-16-மலேசியர்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும் என்ற தனது கருத்தை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தற்காத்துப் பேசியுள்ளார்.
இந்த ஆலோசனை, அரசாங்கத்திடம் உணவு பாதுகாப்பு திட்டம் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதல்ல என அவர் விளக்கமளித்தார்.
மாறாக, நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு கூடுதல் முயற்சியாக மக்கள் இதை பார்க்க வேண்டும் என்றார் அவர்.
மேற்காசியா உட்பட உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் காரணமாக, எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
இதனால், வீட்டு தோட்டங்களில் மிளகாய், கத்திரிக்காய் மற்றும் வெங்காயத்தாள் போன்ற விரைவாக வளரக்கூடிய பயிர்களை மக்கள் வளர்க்கலாம் என அவர் ஊக்குவித்துள்ளார்.
இப்பரிந்துரையை ஏளனம் செய்ய ஒன்றுமில்லை என்றார் அவர்.
சிங்கப்பூர், ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் நகர்ப்புற விவசாயத்தை ஊக்குவித்து வருவதையும் மாட் சாபு சுட்டிக் காட்டினார்.



