
காஜாங், மார்ச்-30-சிலாங்கூர், காஜாங்கில் 17 வயது பையனைத் தாக்கியக் குற்றச்சாட்டில், Grab நிறுவனம் அதன் ஓட்டுநர் ஒருவரை இடைநீக்கம் செய்துள்ளது.
பயணம் முடிந்தபின் அப்பையனைத் தலை, முகம் மற்றும் உடலில் அந்த ஓட்டுநர் தாக்கியதாக போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளது.
“இறங்க வேண்டிய இடம் வந்ததும், அங்கே ஏராளமான தெரு நாய்கள் இருந்ததால், கொஞ்சம் பின்னால் சென்று இறக்கி விடுமாறு கேட்டேன்; ஆனால் அவரோ முடியாது எனக் கூறி, காரை விட்டு உடனே வெளியேறுமாறு கத்தினார்; இறங்கும் போது, கதவை வேகமாக சாத்தி விட்டேன்; உடனே காரிலிருந்து இறங்கி வந்து என்னை கடுமையாகத் தாக்கினார்” என அப்பையன் தனது புகாரில் குறிப்பிட்டார்.
இதையடுத்து போலீஸார், விசாரணையைத் தொடங்கியிருக்கும் நிலையில், உள் கட்ட நடவடிக்கையாக Grab அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக எடுத்துக்கொள்வதாகக் கூறிய Grab, பயணிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமைத் தருவதாகத் தெரிவித்தது.
எக்காரணம் கொண்டும் வன்முறையுடன் சமரசம் செய்ய முடியாது என்றும் அது திட்டவட்டமாக் கூறியது.
இச்சம்பவம், e-hailing சேவைகளில் பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.



