
கோலாலம்பூர், மார்ச்-31-2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக் கட்டத் திட்டம் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் தீவிர சிந்தனையில் மூழ்கியிருப்பர்.
அவ்வகையில், SPM தேர்வை முடித்த மாணவர்களுக்கு, உயர் கல்வி லட்சியப் பயணம் (UKLP) 2026, என்றப் பெயரில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலை வழங்கும் தேசிய அளவிலான திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவும் மாநில இளைஞர் பிரிவுகளும் இதனை இணைந்து நடத்துகின்றன.
தேர்வில் வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்தவர்களும் தங்கள் அடுத்த கல்வி பாதையைத் தெளிவாகத் திட்டமிட உதவுவதே இதன் நோக்கம் என, ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
நாளை ஏப்ரல் 1-ஆம் தேதி மலாக்காவில் தொடங்கும் இந்நிகழ்வு, ஏப்ரல் 4-ஆம் தேதி பஹாங்கில் நடைபெறுகிறது.
ஏப்ரல் ஐந்தாம் தேதி கெடா, பேராக், சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இந்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
பல்கலைக்கழக விண்ணப்ப வழிகாட்டுதல்களோடு, “1 to 1” முறையில் மாணவர்வர்களுக்கு நேரடி ஆலோசனை சேவையும் வழங்கப்படும் என அர்விந்த் சொன்னார்.
எனவே, மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் நடைபெறும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, எதிர்காலத்தை தெளிவாகவும் நம்பிக்கையுடனும் அமைத்துக்கொள்ள அர்விந்த் அழைப்பு விடுத்தார்.



