
பத்து பஹாட், ஏப் 6 – பத்து பஹாட் ,டோங்காங் பெச்சாவில், (Tongkang Pechah) பொது பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அடங்கிய குழுவினர் , நேற்று மாலை ஒரு கால்வாயில் சிக்கியிருந்த முதலையைப் பிடிக்க சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டனர்.
ஐந்து மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை, மாலை மணி 6.50 அளவில் அந்த இடத்திற்கு அருகில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு தொழிற்சாலை ஊழியரால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வழிதவறிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலை ஊழியரிடமிருந்து அழைப்பு வந்தவுடன், அந்த முதலையைப் பிடிக்க உதவுவதற்காக பொது தற்காப்பு படையின் ஆறு APM உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
தற்போதைய வறட்சி காலத்தினால் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையினால் முதலை கால்வாயில் சிக்கிக் கொண்டதாக பத்து பஹாட் பொது தற்காப்பு படையைச் சேர்ந்த லான்ஸ் கார்ப்பரல் முகமட் நோராஷிம் முகமட் காலிட் கூறினார்.
அந்த முதலைக்கு பற்கள் இல்லாததால் அது வயதானது என்பதை கண்டறிந்தோம், ஆனாலும் நாங்களும் அப்பகுதி மக்களும் அதைப் பிடிக்க முயன்றபோது அது ஆக்ரோஷமாக இருந்ததால் ஒரு கயிற்றைப் பயன்படுத்தி அதன் வாயைக் கட்டி, நான்கு சக்கர வாகனம் மூலம் அதை கரைக்கு இழுத்து வந்து வெற்றிகரமாக கட்டிப் போட்டோம்.
முன்பு பிடிக்கப்பட்ட முதலைகளைப் போல அவ்வளவு வலிமையானதாக இல்லை. பின்னர் அந்த முதலை பத்து பஹாட் APM அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் பாதுகாப்புத் துறையிடம் தெரிவிக்கப்பட்டது.



