
கோலாலம்பூர், ஏப் 16 -துபாயில் உள்ள ஆடம்பர ஹோட்டலான புர்ஜ் அல் அரப்,
( Burj Al Arab ) 18 மாத கால முக்கிய புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று அதன் ஊழியர் ஒருவர் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
1999-ல் திறக்கப்பட்டதிலிருந்து இதுவே அதன் முதல் புனரமைப்புப் பணியாகும். மேலும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக அப்பகுதியில் சுற்றுலா மந்தமாகியுள்ள ஒரு காலகட்டத்தில் இது நிகழ்கிறது.
இந்தப் பணிகள் சுமார் 18 மாதங்களுக்குப் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும், பாரிஸை தளமாகக் கொண்ட உள்ளகக் கட்டடக் கலைஞர் டிரிஸ்டன் ஆவர் (Triatan Auer )
இந்தப் பணிகளுக்குத் தலைமை தாங்குவார் என்று ஹோட்டலின் உரிமையாளரான ஜுமேரா, (Jumeirah ) குழுமம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
புனரமைப்புப் பணிகளின் போது ஹோட்டல் மூடப்பட்டிருக்கும் என்பதை அது குறிப்பிடவில்லை.
பணிகள் நடைபெறும் காலத்தில், முன்பதிவு செய்துள்ள விருந்தினர்களுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் மாற்றுத் தங்குமிடங்களை ஹோட்டல் நிர்வாகம் வழங்கி வருவதாக அந்த ஊழியர் கூறினார்.
துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றானதும், ஜுமேரா குழுமத்தின் முதன்மைச் சொத்துமான, பாய்மர வடிவ ஹோட்டல், மார்ச் மாத தொடக்கத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலை இடைமறித்தபோது சிதறிய பாகங்கள் அதன் முகப்பில் தாக்கியதால் சில சேதங்களைச் சந்தித்தது.
எனினும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பணி, மார்ச் மாத சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என்று அந்த ஊழியர் கூறினார்.
ஐக்கிய அரபு சிற்றரசை தளமாகக் கொண்ட ஜுமைரா நிறுவனம், தனது அறிக்கையில் இந்தத் திட்டத்தைப் போருடன் தொடர்புபடுத்தவில்லை.



